நீங்கள் விதைக்காத விதைக்காக உங்கள் அற்புதம் காத்துக்கொண்டிருக்கிறது
- Henley Samuel

- May 2
- 5 min read
மே 02, 2026

அறிவியல்கூட ஏற்றுக்கொள்கிற ஒரு விதி இந்த பிரபஞ்சத்தை ஆளுகிறது. ஒரு பந்தை எந்த உயரத்திலிருந்து கீழே போட்டாலும் அது கீழே விழும். சில நேரங்களில் அல்ல. எப்போதும். யாராவது அதற்காக ஜெபிக்கிறார்கள் என்பதாலோ அல்லது சடங்குகளை செய்கிறார்கள் என்பதாலோ அல்ல. ஏனென்றால் புவியீர்ப்பு விசை என்பது நிலையான, மாற்ற முடியாத ஒரு கொள்கை. ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை அவர் கண்டறிந்தார். தேவன் தமது வார்த்தையின் மூலம் நமக்குக் காண்பித்தது இதுதான்: பரலோக ராஜ்யமும் அதேபோன்று நிலையான, நம்பகமான மற்றும் மாற்ற முடியாத ஒரு கொள்கையின்படியே செயல்படுகிறது. அந்த கொள்கைதான் வார்த்தை.
இருக்கிற அனைத்தும் வார்த்தையினாலேயே உண்டாக்கப்பட்டது
யோவான் முதல் அதிகாரத்திற்கு நாம் வரும்போது, நாம் கவிதையை வாசிக்கவில்லை. எல்லா சிருஷ்டிப்பையும் ஆளுகிற விதியை வாசிக்கிறோம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:1-4)
இதை கவனமாக வாசியுங்கள். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. வார்த்தையின் மூலமாய். சில காரியங்கள் அல்ல. பெரும்பாலான காரியங்கள் அல்ல. சகலமும். வார்த்தை இல்லாமல், இருக்கிற எதுவுமே உண்டாகவில்லை என்னும் தர்க்கரீதியான முடிவை இந்த வசனம் கூறுகிறது, இது நாம் வாழும் விதத்தைப் பற்றிய அனைத்தையும் மாற்றக் கூடியதாக இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று உருவாக வேண்டுமானால், அது வார்த்தையின் மூலமாகத்தான் வர வேண்டும். இது வெறும் ஆலோசனை அல்ல. புவியீர்ப்பு விசை எப்படி மாற்ற முடியாததோ, அதேபோன்று இதுவும் தேவனுடைய ராஜ்யத்தின் நிலையான விதியாகும்.
வார்த்தை இல்லாமல், எதுவும் உதிக்காது (உருவாகாது). இது ஒரு கட்டுப்பாடு அல்ல. இது ஒரு வெளிப்பாடு.
வார்த்தையே விதை
மற்கு அதிகாரம் 4-இல், இயேசு பல உவமைகளைத் தொடர்ச்சியாகக் கற்பிக்கிறார், அவை அனைத்தும் ஒரு மையக் கருத்தைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.(மற்கு 4:26-27)
பின்னர் 14-ஆம் வசனத்தில், இந்த ஒவ்வொரு உவமைகளுக்கும் விளக்கமளிக்கும் திறவுகோலை அவர் நமக்குக் கொடுக்கிறார்:
விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். (மற்கு 4:14)
விதை என்பது வார்த்தை. தேவனுடைய ராஜ்யம் ஒரு விவசாயி விதையை விதைப்பதைப் போன்றே சரியாகச் செயல்படுகிறது. இது ஒரு மாயாஜால சடங்கு போன்றதல்ல. கூரையைப் பார்த்து சத்தமிடும் உணர்ச்சிவசப்பட்ட ஜெபத்தைப் போன்றதல்ல. விவசாயி ஒரு விதையை பண்படுத்தப்பட்ட நிலத்தில் இட்டு, அந்த செயல்முறையை நம்பி, பின்னர் சென்று தூங்கி காலையில் விழித்தெழுவதற்கு ஒப்பானது.
இயற்கையிலுள்ள அனைத்தும் இதை உறுதிப்படுத்துகின்றன. நீங்கள் ஒருபோதும் ஒரு அண்டை வீட்டாரது தோட்டத்திற்குச் சென்று, அங்கே பூத்திருக்கும் அழகான ரோஜாக்களைப் பார்த்து, அவைகள் தற்செயலாக எங்கிருந்தோ தோன்றின என்று முடிவுக்கு வரமாட்டீர்கள். யாரோ ஒருவர் ஒரு விதையை நட்டுள்ளார். விதை இல்லாமல் உங்களால் கனியைப் பெற முடியாது. விதை இல்லை என்றால் கனியும் இல்லை. இது மிகவும் எளிமையானது, அதே அளவுக்கு தீவிரமானதும் ஆகும்.
விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். (மற்கு 4:14)
நீங்கள்தான் அந்த விவசாயி. அந்த விதை ஏற்கனவே உங்கள் கைகளில் இருக்கிறது.
சேமிப்பறையில் உள்ள விதை
பல விசுவாசிகள் வாழும் துயரம் என்னவென்றால், அவர்களிடம் வேதாகமம் இல்லை என்பதல்ல. வேதாகமம் திறக்கப்படாமலேயே இருக்கிறது என்பதே அந்தத் துயரம். விதை அங்கே இருக்கிறது. வாக்குத்தத்தங்கள் அங்கே இருக்கின்றன. அவர்களின் ஆரோக்கியம், அவர்களது குடும்பம், அவர்களது நிதிநிலை, அவர்களது எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்த வார்த்தை அங்கேயே இருக்கிறது. ஆனால் அந்த விதை ஒருபோதும் அவர்களின் இதயமாகிய நிலத்திற்குள் செல்வதில்லை.
ஒரு விவசாயியைக் கற்பனை செய்து பாருங்கள், அவர் விதையை வாங்கி, சரியாக சேமித்து, தனது சேமிப்பறையில் (garage) பாதுகாப்பாக வைத்து, ஒவ்வொரு நாளும் தனது வயலிலுள்ள மண்ணுக்குத் தண்ணீர் பாய்ச்சி, அந்த வயலைச் சுற்றி எல்லா வகையான சடங்குகளையும் செய்கிறார், ஆனால் ஒன்றை மட்டும் செய்யவில்லை: அவர் ஒருபோதும் அந்த விதையை நிலத்தில் விதைக்கவே இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் எதைக் காண்பார்? எதுவும் முளைத்திருக்காது. களைகள் ஆக்கிரமித்திருக்கும். மேலும் அவர் விரக்தியடைவார்.
வேதாகமத்தை உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துவிட்டு, உங்கள் இதயத்தில் ஒரு அறுவடையை எதிர்பார்க்க முடியாது. உங்கள் சூழ்நிலையைப் பற்றி தேவன் உண்மையில் என்ன சொல்கிறார் என்பதை ஒருபோதும் தியானிக்காமல், வெறும் உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் மட்டுமே ஒரு அற்புதத்தைப் பெற்றுவிட முடியாது. உபவாசமும் ஜெபமும் வல்லமையானவை. ஆனால் அவை வார்த்தையோடு இணைந்து செயல்படுவதற்கு வடிவமைக்கப்பட்டவையே தவிர, வார்த்தைக்கு மாற்றாக அல்ல.
இந்த கொள்கை முழுமையானது: விதை இல்லாமல், அறுவடை இல்லை.
ஜெபம் என்பது உண்மையில் என்ன
நாம் தேவனை எவ்வாறு அணுகுகிறோம் என்பது குறித்தான அனைத்தையும் மாற்றியமைக்கும் ஒரு தெளிவான அறிக்கை உள்ளது. ஜெபம் என்பது கெஞ்சுவதல்ல. தேவன் வாக்குத்தத்தம் செய்யாத ஒன்றைச் செய்யும்படி அவரை நம்பவைப்பதற்கான ஒரு தீவிரமான முயற்சியும் ஜெபமல்ல. ஜெபம் என்பது தேவனுடைய வாக்குத்தத்தங்களை நன்றியோடு அவருக்கே திரும்ப அறிக்கை செய்வதாகும்.
நீங்கள் ஜெபத்தில் தேவனிடம் வரும்போது, நீங்கள் அவரை சமாதானப்படுத்தவில்லை. அவர் ஏற்கனவே சொன்ன வார்த்தைகளுடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்கள். அவர் ஏற்கனவே உங்களுக்குக் கொடுத்த விதையை எடுத்து, அதை நன்றியோடு உங்கள் இதயமாகிய நிலத்தில் வைக்கிறீர்கள். அதுதான் ஆராதனை. அதுதான் விசுவாசம்.
உவமையில் வரும் அந்த மனிதன் தூங்குகிறான், விழிக்கிறான், தூங்குகிறான், விழிக்கிறான். அவன் கவலைப்படவில்லை. அவன் விதையை விதைத்துவிட்டான். விதை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும். அவன் அந்த வடிவமைப்பை நம்புகிறான்.
விதையைத் தோண்டி எடுப்பதில் உள்ள ஆபத்து
போராடும் விசுவாசிகளிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு பழக்கம் இதுதான்: அவர்கள் ஒரு வார்த்தையைப் பெறுகிறார்கள், அதற்காக ஜெபிக்கிறார்கள், பின்னர் அதை மீண்டும் தோண்டி எடுக்கச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்கள் தங்கள் சரீரத்தின் மீது சுகமளிக்கும் வாக்குத்தத்தங்களை விதைக்கிறார்கள். திங்கட்கிழமை பிற்பகலில், செய்தி அறிக்கை வேறு ஒன்றைக் கூறுகிறது, மருத்துவரின் அறிக்கை வேறொரு காரியத்தைக் கூறுகிறது, உடனே அவர்கள் அந்த விதையை சோதிப்பதற்காக நிலத்திலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கிறார்கள்.
"விதையே, நீ எப்படி இருக்கிறாய்? ஏதாவது நடந்ததா? நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் உன்னை விதைத்தேன். ஏன் இன்னும் அறுவடை இல்லை?"
பின்னர் வேறொருவர் பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிக்கையோடு வருகிறார், உடனே அவர்கள் அந்த விதைக்கு பதிலாக அந்த பயமுறுத்தும் குரலிடம் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஜீவனுள்ள ஒரு விதையை எடுத்து, அது வளர முடியாத சூழ்நிலைக்கு அதை வெளிப்படுத்திவிட்டீர்கள். அதன்பிறகு ஏன் எதுவும் வளரவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்.
இயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதையை விதைத்தவுடன் அதைப் பற்றியே அதிக கவலைக் கொள்வதில்லை. அவர் அந்த செயல்முறையை நம்புகிறார். அவர் தூங்குகிறார். விழித்தெழுகிறார். அவர் தன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அவர் தன் நாட்களைக் கடந்து செல்லும்போது, பூமிக்கு அடியில் அவரால் பார்க்க முடியாததும் அவர் கண்காணிக்கத் தேவையில்லாததுமான கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கே வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் எதிர்பார்ப்பது, கவலையோடு கண்காணிப்பதை அல்ல. உண்மையோடு விதைப்பதே ஆகும்.
முடிவுரை
தேவனுடைய வார்த்தை என்பது ஒரு அலங்காரப்பொருள் அல்ல. அது வெறும் ஆறுதல் தரும் போர்வையும் அல்ல. அது ஒரு விதை. ஒவ்வொரு விதையும் ஒரு முழுமையான அறுவடைக்குத் தேவையான அனைத்தையும் தனக்குள்ளேயே கொண்டுள்ளது. பாதி அறுவடை அல்ல. நிபந்தனைகளுடனான அறுவடை அல்ல. ஒரு முழுமையான அறுவடை. சுகம், தேவைகள் சந்திக்கப்படுதல், மறுசீரமைப்பு, தடைகளை உடைத்து முன்னேறுதல் மற்றும் சமாதானம் ஆகிய அனைத்தும் தேவனுடைய வாக்குத்தத்தங்களில் அடங்கியுள்ளன. ஆனால் விதைக்காமல் இவற்றில் எதுவும் கிடைக்காது.
இருக்கிற அனைத்தும் வார்த்தையின் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. அதாவது உங்கள் வாழ்க்கையில் உருவாக வேண்டிய ஒவ்வொன்றும் வார்த்தையின் மூலமாகவே வர வேண்டும். வார்த்தை என்பது தேவனுடைய ராஜ்யத்தின் விதி, அது புவியீர்ப்பு விசையைப் போன்று நிலையானது மற்றும் உண்மையானது. இன்று நீங்கள் உங்கள் இதயத்தில் விதைப்பது, நாளை உங்கள் அறுவடையாக மாறுவதற்கான வழியில் ஏற்கனவே சென்று கொண்டிருக்கிறது. வார்த்தையாகிய விதை ஒருபோதும் தோற்றுப்போவதில்லை. ஒரே கேள்வி என்னவென்றால், நீங்கள் அதை விதைப்பீர்களா?
இதை தியானியுங்கள்
முதலில் வார்த்தையை விதைக்காமல், உங்கள் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலாவது ஒரு அறுவடையை உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? தேவனுடைய எந்த குறிப்பிட்ட வாக்குத்தத்தத்தை இன்று நீங்கள் விதைத்து தியானிக்க வேண்டும்?
விதைகள் வேரூன்றுவதற்கு நேரம் கிடைப்பதற்கு முன்பாகவே, சந்தேகத்தினால் அவைகளை நீங்கள் தோண்டி எடுக்கிறீர்களா? விதையானது பூமிக்கு அடியில் ஏற்கனவே தன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து ஒரு விவசாயி ஓய்வெடுப்பதைப் போல, வாக்குத்தத்தத்தில் இளைப்பாறுவது எப்படி இருக்கும்?
ஜெபம்
பிதாவே, உமது வார்த்தையே எனக்குத் தேவையான ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் விதையாக இருக்கிறது என்று இன்று நான் அறிக்கை செய்கிறேன். உமது வாக்குத்தத்தங்களை எனது இதயத்தில் விதைக்க நான் தெரிந்துகொள்கிறேன். சந்தேகத்தினாலோ அல்லது பயத்தினாலோ நான் அவற்றை மீண்டும் தோண்டி எடுக்க மாட்டேன். நீர் சொன்ன வார்த்தை எனது வாழ்க்கையில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நான் நம்புகிறேன், அதை என்னால் பார்க்க முடிந்தாலும் சரி, முடியாவிட்டாலும் சரி. உம்முடைய வார்த்தை இல்லாமல் எதுவும் உண்டாகவில்லை என்பதற்காகவும், உமது வார்த்தையினால் எனக்குத் தேவையான அனைத்தும் சாத்தியம் என்பதற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். விசுவாசத்தோடு இன்று இந்த விதையை நான் விதைக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
முக்கிய குறிப்புகள்
சகல சிருஷ்டிப்பும் எப்படி அவர் மூலமாக உண்டானதோ, அதேபோன்று தேவனுடைய ராஜ்யத்தில் உள்ள அனைத்தும் வார்த்தையின் மூலமாகவே உருவாகிறது, இது வார்த்தையை ஒரு நிலையான, மாற்ற முடியாத கொள்கையாக ஆக்குகிறது.
மற்கு 4-ல் வார்த்தையை விதைக்கும் விவசாயி, தியானம் மற்றும் அறிக்கையின் மூலம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தங்கள் இதயத்தில் விதைக்கும் ஒவ்வொரு விசுவாசியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஜெபம் என்பது தேவன் செயல்பட வேண்டும் என்று கெஞ்சுவதல்ல, மாறாக அவர் ஏற்கனவே கூறியதை ஏற்றுக்கொண்டு, அவருடைய வாக்குத்தத்தங்களை நன்றியோடு அறிக்கை செய்வதாகும்.
விதையை விதைத்த பிறகு சந்தேகம் அல்லது பயத்தின் மூலமாக அதைத் தோண்டி எடுப்பதே, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அறுவடைகள் தாமதமாவதற்கும் அல்லது இழக்கப்படுவதற்கும் பொதுவான காரணமாகும்.
தேவனுடைய வார்த்தையாகிய விதை ஒருபோதும் தோற்றுப்போவதில்லை. வாக்குத்தத்தத்திற்குள்ளேயே அறுவடை ஏற்கனவே இருக்கிறது. உண்மையோடு விதைப்பது மட்டுமே தேவைப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் ஹென்லி சாமுவேல் ஊழியங்களுக்கு உரிமையானது. எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகளுக்கும் மேலும் விபரங்களுக்கும் contact@henleysamuel.org. என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இந்த வல்லமையான செய்தியைப் பற்றி மேலும் ஆழமாக அறிய, கீழே உள்ள எங்கள் யூடியூப் (YouTube) வீடியோவில் முழு பிரசங்கத்தையும் தமிழில் பாருங்கள்.




Comments