தேவனுடைய அன்பே உங்கள் விசுவாசம் நிற்கும் அஸ்திபாரம்
- Henley Samuel

- 8 hours ago
- 4 min read
மே 16, 2026

இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான காரியம் கிடைக்கிறது. இது ஒரு உத்தி அல்ல, ஒரு திட்டம் அல்ல, அல்லது செய்ய வேண்டிய காரியங்களின் நீண்ட பட்டியலும் அல்ல. தேவன் உண்மையில் யார் என்ற வெளிப்பாடு உங்களுக்கு கிடைக்கிறது. அந்த வெளிப்பாடு உங்கள் இருதயத்தில் நிலைத்துவிட்டால், எல்லாமே மாறிவிடும். உங்கள் விசுவாசம் உயிர்பெறும். உங்கள் ஜெபங்கள் வல்லமையைக் கொண்டிருக்கும். எவ்வளவு சுய முயற்சிகள் செய்தாலும் கிடைக்காத ஒரு புதிய திசையை நோக்கி உங்கள் வாழ்க்கை நகரத் தொடங்கும். இது அனைத்தும் ஒரு இடத்தில் தான் தொடங்குகிறது: அது தேவனுடைய அன்பு.
விசுவாசம் அன்பின் மூலமாகவே செயல்படுகிறது
அநேக காரியங்களை வெளிப்படுத்தும் ஒரு வசனத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். கலாத்தியர் கூறுகிறது:
"கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்." கலாத்தியர் 5:6
பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். சடங்குகள் முக்கியமல்ல. மார்க்கச் செயல்பாடுகள், உங்கள் பின்னணி அல்லது உங்கள் கடந்த கால சாதனைகள் முக்கியமல்ல. அன்பினால் கிரியை செய்துகாட்டும் விசுவாசமே முக்கியம். "கிரியைசெய்கிற" என்ற வார்த்தையே இங்கு முக்கியமானது. தேவனுடைய அன்பை நீங்கள் புரிந்துகொள்ளும் அந்த நிமிடத்தில், உங்கள் விசுவாசம் செயல்படத் தொடங்குகிறது. இயற்கை உலகில் ஈர்ப்பு விசை எப்படி அனைத்தையும் தொடர்ந்து விதிவிலக்கின்றி கீழே இழுக்கிறதோ, அதைப்போலவே தேவனுடைய ராஜ்யத்திலும் ஒரு விதி உள்ளது: அன்பு விசுவாசத்தை செயல்படுத்துகிறது. அது இல்லாமல், விசுவாசம் செயலற்று இருக்கும்.
இதனால்தான் அநேக உண்மையான விசுவாசிகள் பல வருடங்களாக ஜெபித்தும் சிறிய மாற்றத்தையே காண்கிறார்கள். இதற்கு தேவன் செயல்பட விரும்பவில்லை என்பது காரணமல்ல, மாறாக தேவனுடைய அன்பைப் பற்றிய புரிதலால் விசுவாசம் தூண்டப்படாமல் இருந்ததே காரணமாகும். அந்தப் புரிதல் வரும்போது, எல்லாமே மாறும்.
நீங்கள் ஏற்கனவே அவருடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள்
எதிரி நீங்கள் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு காரியம் இங்கே இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஏவாளிடம் வந்தபோது, அது சொன்னது:
"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ஆதியாகமம் 3:5
தேவன் அவர்களுக்கு ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருக்கிறார் என்றும், அவர்கள் இந்த ஒரு காரியத்தை செய்தால் தேவனைப் போல் ஆகிவிடலாம் என்றும் நம்ப வைப்பதே எதிரியின் தந்திரமாக இருந்தது. ஆனால் ஏற்கனவே உண்மையாக இருந்தது என்னவென்பதைப் பாருங்கள். ஆதியாகமம் கூறுகிறது:
"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..." ஆதியாகமம் 1:26
அவர்கள் ஏற்கனவே அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரோடு அவர்கள் ஏற்கனவே ஐக்கியத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. சர்ப்பம் தேவனுடைய குணத்தைப் பற்றி ஒரு பொய்யை நுழைத்தது: தேவன் அவர்களை முழுமையாக நேசிக்கவில்லை என்றும், தேவன் எதையோ மறைத்து வைத்திருக்கிறார் என்றும் அது கூறியது. அந்த சந்தேகம் நுழைந்த மறுகணமே, பாவம் தொடர்ந்தது. இது ஏதேன் தோட்டத்தில் மட்டுமல்ல, ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வேராகும். தேவனுடைய அன்பைச் சந்தேகியுங்கள், அப்போது பாவம் தனக்கான வழியைக் கண்டுபிடிக்கும்.
தேவனுடைய அன்பைப் பற்றிய சந்தேகமே ஒவ்வொரு பாவமும் வளரும் மண்ணாக இருக்கிறது.
உங்கள் நிலை வெற்றியிலிருந்து தொடங்குகிறது
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு அற்புதமான காரியம் நடக்கிறது. தேவன் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே உட்காரச் செய்திருக்கிறார் என்று எபேசியர் 2 சொல்கிறது. நாம் என்றாவது ஒரு நாள் அங்கே உட்காருவோம் என்றோ அல்லது நாம் சற்று மேம்பட்ட பிறகு உட்கார வைப்பார் என்றோ கூறாமல், ஏற்கனவே நம்மை அங்கே உட்காரச் செய்துவிட்டார்.
ஆரம்பத்தில் தேவன் எப்படிப் படைத்தார் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர் மனிதனை முதலில் படைத்துவிட்டு, அவனுக்காக ஒரு உலகத்தைத் தயாரிக்க அவசரப்படவில்லை. வெளிச்சம், நிலம், உணவு, காற்று, பழங்கள் என மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்து, அதன் முடிவில் தான் ஆதாமை உருவாக்கினார். அதில் வசிக்கப்போகிறவன் வருவதற்கு முன்பே படைப்புகள் அனைத்தும் முழுமையாகத் தயார் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்பாக, ஆதாமுக்குப் பிறகு ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமைப் படைத்துவிட்டு: இப்போது நான் உன்னை உருவாக்குவேன் என்று கூறினார். அதில் ஒரு அழகான வரிசை இருக்கிறது.
இது உங்களுக்கு என்ன சொல்கிறது? தேவன் ஒருபோதும் யாரையும் குறையுள்ள ஒரு இடத்திற்கு வரவழைப்பதில்லை என்பதை இது காட்டுகிறது. நீங்கள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே எல்லாம் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
நீங்கள் மறுபடியும் பிறக்கும்போதும் இதே முறை தொடர்கிறது. தேவன் உங்களை ஒரு மலையின் அடிவாரத்தில் நிறுத்திவிட்டு, மேலே ஏறுவதற்கான கட்டளைகளைக் கொடுப்பதில்லை. அவர் உங்களை கிறிஸ்துவோடேகூட உன்னதங்களில் உட்கார வைக்கிறார். அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். நீங்கள் இப்போதே அங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் நிலை என்பது நீங்கள் உழைத்து அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல. அது நீங்கள் வாழத் தொடங்கும் தொடக்கப்பள்ளியாகும்.
இதனால்தான் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்வதில்லை. அது வெற்றியிலிருந்து தொடங்குகிறது. நீங்கள் பலவீனமாகத் தொடங்கி, பலத்தை நோக்கிச் செல்வதில்லை. நீங்கள் பலத்தில் தொடங்கி, அந்த இடத்திலிருந்து செயல்படுகிறீர்கள்.
தேவன் எப்போதும் உங்களை நோக்கியே வந்துகொண்டிருக்கிறார்
ஆதாம் தோட்டத்தில் தன்னை மறைத்துக்கொண்ட அந்தத் தருணத்திலிருந்து, தேவன் மனித குலத்தை நோக்கி வருவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆதாமும் ஏவாளும் வீழ்ந்தார்கள். ஆனால் தேவன் அவர்களைத் தேடி வந்தார். காயீன் முதல் கொலையைச் செய்தான். தேவன் அப்போதும் அவனோடு பேசினார், அவனுக்குப் பாதுகாப்பின் அடையாளத்தையும் கொடுத்தார். அதன்பிறகு ஒவ்வொரு தலைமுறையிலும், கிளர்ச்சியும் அழிவும் இருந்த போதிலும், தேவன் அவர்களை நெருங்கி வர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். நோவாவின் காலத்தில், அவர் கிருபையினால் மனித இனத்தைப் பாதுகாத்தார். மோசேயின் காலத்தில், விசுவாசிகளின் தேசத்துடனும் அவர் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினார். மக்கள் மறுத்து, "தேவன் எங்களோடு பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம்" என்று சொன்னபோதும், அவர் வேறு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
அவர் பின்வாங்குவதற்கான காரணங்களை ஒருபோதும் தேடவில்லை. அவர் எப்பொழுதும் உள்ளே வருவதற்கான வழியையே தேடிக்கொண்டிருந்தார்.
நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளம் கூட கோபமான ஒரு தேவனின் சீற்றத்தின் வெளிப்பாடு அல்ல. முற்றிலுமாக கெட்டுப்போன மனித குலம், அழியாத நிலையில் என்றென்றும் அப்படியே வாழ்ந்தால், அது கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய கொடுமையாக இருக்கும் என்பதை அறிந்த அன்பான தேவனின் செயலாகும் அது. கிறிஸ்து வரப்போகிற வழியைப் பாதுகாப்பதற்காக, அவர்களை அழித்துக் கொண்டிருந்த காரியங்களை அவர் வெட்டி எறிந்தார். அதற்கு காரணம் அன்பே.
உங்களுக்குத் தேவையான வெளிப்பாடு
பழைய ஏற்பாட்டின் தேவனும் புதிய ஏற்பாட்டின் தேவனும் இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்ல. அவர் எப்போதுமே அன்பாகவே இருக்கிறார். சமாரியக் கிராமத்தின் மீது அக்கினியை இறக்க விரும்பிய தம்முடைய சீடர்களை இயேசு திருத்தியபோது, லூக்கா தெளிவாக வெளிப்படுத்தும் அதே சத்தியம் தான் ஆதியிலிருந்தே உண்மையாக இருக்கிறது:
"மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு வரவில்லை, இரட்சிக்கிறதற்கே வந்தார்." லூக்கா 9:56
உங்கள் உடலில் என்ன வியாதி இருந்தாலும், தேவன் அதை அனுப்பவில்லை. உங்கள் குடும்பத்தில் உள்ள எந்தக் குழப்பத்துக்கும் தேவன் காரணமல்ல. அவைகளில் இருந்து உங்களை விடுவிக்கவே அவர் ஏங்குகிறார். தேவன் உண்மையிலேயே யார் என்ற இந்த வெளிப்பாட்டை நீங்கள் பெறும்போது, உங்கள் விசுவாசம் மதச்சடங்காக இருப்பதை நிறுத்திவிட்டு, உயிருள்ள ஒன்றாக மாறும். ஏனென்றால், அன்பினால் செயல்படும் விசுவாசமே பலன் தரும் ஒரே விசுவாசம்.
முடிவுரை
நீங்கள் மிகக் குறைவாக ஜெபித்தீர்கள் அல்லது மிகக் குறைவாக விசுவாசித்தீர்கள் என்பது ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை. தேவனுடைய அன்பைச் சந்தேகிக்கிற இருதயத்தில் விசுவாசம் செயல்பட முடியாது என்பதே பிரச்சனை. இன்று இதை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள்: அவர் உங்களை தமது சாயலில் படைத்தார். நீங்கள் எதையும் சம்பாதிப்பதற்கு முன்பே அவர் உங்களை கிறிஸ்துவுக்குள் உட்காரச் செய்திருக்கிறார். அவர் தொடக்கத்திலிருந்தே உங்களைத் தொடருகிறார். அவர் அழிக்க வரவில்லை. அவர் இரட்சிக்கவே வந்தார். அந்த சத்தியம் உங்கள் அஸ்திபாரமாக மாறும்போது, உங்கள் விசுவாசம் மலைகளை அசைக்கத் தொடங்கும், ஏனென்றால் அது எப்போதுமே எந்த அஸ்திபாரத்தில் நிற்கவேண்டியதோ அங்கிருந்து செயல்படத் தொடங்குகிறது.
இதைச் சிந்தித்துப் பாருங்கள்
உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியில், தேவன் உங்களிடமிருந்து ஏதோ ஒன்றை மறைத்து வைக்கிறார் என்று நீங்கள் அறியாமலேயே நம்பியிருக்கிறீர்கள்? அவருடைய அன்பைத் தெளிவாகப் பார்ப்பது அந்தப் பகுதியை நீங்கள் அணுகும் விதத்தை எப்படி மாற்றும்?
உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றிக்காக உழைப்பதற்குப் பதிலாக, வெற்றியின் நிலையிலிருந்து தொடங்க வேண்டும் என்பதாய் இருந்தால், இந்த வாரம் அந்த இடத்திலிருந்து ஜெபிப்பது, நம்புவது மற்றும் வாழ்வது நடைமுறையில் எப்படி இருக்கும்?
ஜெபம்
பிதாவே, நீர் அன்புள்ளவராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் அன்பைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, நீரே அன்பாக இருக்கிறீர். நீர் என்னை உமது சாயலில் படைத்தீர் என்றும், நீர் என்னைக் கிறிஸ்துவோடேகூட உன்னதங்களில் உட்காரச் செய்திருக்கிறீர் என்றும், நீர் ஒருபோதும் என்னை நோக்கி வருவதை நிறுத்தவில்லை என்றும் நான் அறிக்கையிடுகிறேன். நீர் எனக்கு எதையோ மறைத்து வைக்கிறீர் என்று சொல்லும் ஒவ்வொரு பொய்யையும் நான் நிராகரிக்கிறேன். இன்று எனது விசுவாசம் நிற்கும் அஸ்திபாரமாக உம்முடைய அன்பின் வெளிப்பாட்டை நான் பெற்றுக்கொள்கிறேன். சுய முயற்சியினால் அல்ல, எனது இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கும் தேவனுடைய அன்பினாலேயே எனது விசுவாசம் உயிரோடு இருக்கிறது மற்றும் செயல்படுகிறது என்று இயேசுவின் நாமத்தில் நான் அறிக்கையிடுகிறேன், ஆமென்.
முக்கிய குறிப்புகள்
மார்க்கச் சடங்குகளின் மூலம் அல்லாமல், தேவனுடைய அன்பை உண்மையாகப் புரிந்துகொள்வதன் மூலமே விசுவாசம் செயல்படத் தொடங்குகிறது.
ஆதாமும் ஏவாளும் தேவனுடைய அன்பை சந்தேகித்தபோதே முதல் பாவம் நுழைந்தது; தேவனுடைய அன்பின் மீதான சந்தேகமே ஒவ்வொரு ஆவிக்குரிய போராட்டத்தின் வேராகும்.
"தேவனைப் போல்" மாறலாம் என்று எதிரி ஏவாளைச் சோதிப்பதற்கு முன்பே நீங்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருந்தீர்கள், அதாவது அவள் ஏற்கனவே பெற்றிருந்த ஒன்றைக் குறித்தே அந்தப் பொய் சொல்லப்பட்டது.
உங்களது கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் வெற்றியின் நிலையிலிருந்தே தொடங்குகிறது, அதை நோக்கிய பயணமாக அல்ல.
தேவன் நியாயந்தீர்க்கக் காத்திருக்காமல், அன்பின் காரணமாகவே வரலாறு முழுவதும் மனிதகுலத்தை நோக்கியே வந்துகொண்டிருக்கிறார்.
இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் ஹென்லி சாமுவேல் ஊழியங்களுக்கு உரிமையானது. எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகளுக்கும் மேலும் விபரங்களுக்கும் contact@henleysamuel.org. என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இந்த வல்லமையான செய்தியை இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள, கீழே உள்ள எங்கள் யூடியூப் வீடியோவில் முழு செய்தியையும் தமிழில் பாருங்கள்.
20 09 2020




Comments